அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?
சரி, நானும் பெயருக்கு கவிதை என்று சில வரிகளைக் கிறுக்குவது உண்டு. நான் முதன் முதலில் அமெரிக்கா வந்த போது, கெண்டகியில் (Kentucky) உள்ள லூயிவில்லிற்கு (Louisville) வந்தேன். அது ஒரு அக்டோபர் மாதம், 2000 ஆம் ஆண்டு, வந்த இரண்டு வாரங்களிலேயே வெண் பனியும், உறைய வைக்கும் பனியும் ஆரம்பித்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து தினம் 20 நிமிடம் நடந்தே அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களின் உறைபனியும், கடுங்குளிரும் தாள முடியவில்லை. என்னுடைய சத்தியம் அலுவலகமோ மூன்று மாதங்களே பணி என்று கூறியதால், வாகனம் வாங்கவில்லை. டாக்ஸியைக் கூப்பிடலாம் என்றால் 20 நிமிடம் தூரத்திற்கு 45 நிமிடம் அவர்களுடைய வருகைக்காக காத்திருக்க வேண்டும். நான் இருந்த இடம் லூயுவில்லில் ஒரு கிராமம், சில சமயம் டாக்ஸி வராமலேயே போய்விடும். யார் காத்துக் கொண்டிருப்பது என நடராஜா சர்வீஸ் தான் அலுவலக்த்திற்கு... -15 டிகிரி பாரன் ஹிட்டிலும் இருபது நிமிட நடை. இந்தியாவிலிருந்து வரும் போது ஒரு லெதர் ஜாக்கெட் வாங்கி வந்தேன். அது மாட்டின் கணம். அதைப் போட்டுக் கொண்டு நடந்தால், அதனுடைய பாரத்திலேயே கால்கள் பனிக்குள்ளே சென்று மாட்டிக் கொண்டு விட்டது.
இப்படியாக இருந்த சமயம் கிறுக்கிய எண்ணக் குமுறல் இது. கவிதை என்று பெரிதாக எழுதிவிட்டு உரைநடையாக இருக்கிறதே என்று திட்டாதவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
என்ன இது!! நான் இந்தியாவில்
இருக்கும் போது என்னால்
பார்க்கப் பட்ட அழகான
எப்பொழுதும் ஆனந்தமாக தெரிந்த
அந்த வசந்த அமெரிக்கா
எங்கே போனது!!
இங்கு நான் வந்ததும்,
புது இடம், புது சூழ்நிலை
புரியாத மனிதர்கள்
புரிந்தும் புரியாத
நடைமுறைகள்! என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
எப்பொழுதும் அடர்த்தியான குளிர்
எதிர் பார்க்காத அளவிற்கு
மாறும் தட்ப வெப்பம்
முகத்தில் சுள்ளென்று அடிக்கும்
குளிர்காற்று, உதடுகளை
வருடவைக்கும் கடுங்காற்று
கையுறைக்குள்ளும் புகுந்து
தாக்கும் கடும்பனி
இன்று பனி, நாளை மழை
மறுநாள் சூரியனையே
பார்க்காத மேகக் கூட்டம்
நடந்தால் உறையவைக்கும்
பனி! ஆகா! எத்தனை
மாற்றம் இங்கே! எத்தனைக்
கஷ்டங்கள் இங்கே!
எங்கே அன்று தெரிந்த
அந்த வசந்த அமெரிக்கா
எங்கே போனது?
இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம், என்னைப் போல் உங்கள் யாருக்காவது தோன்றியிருந்தால் எனக்கு ஆறுதல் கூறுங்கள். தமிழன் நிலாவிற்கு சென்றாலும், காற்றே இல்லாத வேற்று கிரக்கத்திற்கு சென்றாலும் வாழத் தெரிந்தவன், சும்மா குளிருதுன்னு அதுக்கு கவிதையான்னு கேட்டிங்கன்னா?
நான் என்னத்த சொல்ல?
